தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவின் சார்பாக நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில், மருத்துவக் கல்லூரி முதல்வர் எபனேசர் ஜோயேல் குமார், மருத்துவக் கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெபமணி மற்றும் தோல் நோயியல் துறைத் தலைவர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவைத் துவக்கி வைத்துப் பேசிய மருத்துவக் கல்லூரி முதல்வர், மனித உடலுக்கும் மனதிற்கும் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் எவ்வாறு துணைபுரிகின்றன என்பது குறித்தும், அன்றாட வாழ்வில் யோகாவைப் பின்பற்றுவதன் பயன்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, தற்போதைய வாழ்வியல் சூழலில் முதியவர்கள் மற்றும் வயதானவர்களுக்குத் தேவையான "ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்ற தத்துவார்த்தத் தலைப்பில் டாக்டர் ஹரிப்ரியா விரிவாக உரையாற்றினார்.
மேலும், டாக்டர் ஹரிப்ரியா மற்றும் நோய் தீர்வியல் உதவியாளர் பிரியா ஆகியோர் இணைந்து, அன்றாட ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு முக்கிய யோகாசனங்கள் மற்றும் பிராணாயாமம் போன்ற மூச்சுப்பயிற்சிகளைப் மேடையில் செய்முறை விளக்கத்துடன் நேரடியாகச் செய்து காட்சிப்படுத்தினர்.
இதனை பார்த்த மருத்துவ அலுவலர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள், மருத்துவ மேற்பார்வையாளர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் அந்தந்த யோகாசனப் பயிற்சிகளைத் தாங்களும் நேரடியாகச் செய்து பழகினர்.
நிகழ்ச்சியில், நோயற்ற வாழ்விற்கு யோகாவின் அவசியம் என்ன, அது உடலுக்குத் தரும் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கிய நன்மைகள் குறித்துப் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.